24 July 2015

முதுநிலைப் பட்ட கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதுநிலைப் படிப்புகளுக்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) கல்வி உதவித் தொகைகளைப் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 முன்னர், இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான முதுநிலை தொழில்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டம், ஒரே பெண் குழந்தைக்கான இந்திரா காந்தி முதுநிலைப் பட்ட கல்வி உதவித் தொகை திட்டம், பல்கலைக்கழக அளவில் இளநிலைப் பட்டப் படிப்பில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கான முதுநிலைப் பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசித் தேதியாகும்.
 இந்தத் திட்டங்களின் கீழ், தேர்வு செய்யப்படுவோருக்கு முதுநிலைப் பட்டப் படிப்பு மேற்கொள்ள மாதம் ரூ. 3,100 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 மேலும் விவரங்களுக்கு w‌w‌w.‌u‌gc.ac.‌i‌n என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.