15 September 2014

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு வேலை!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிர்வாகப் பணிகளில் சேர விரும்பும் பொறியியல் பட்டதாரிகள் கேட் தேர்வை எழுதியிருக்க வேண்டும்.

மத்திய அரசின்கீழ் இயங்கும் நவரத்தினா நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிகளில் சேர விரும்புபவர்கள், மெக்கானிக்கல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.இ. அல்லது பி.டெக். அல்லது பி.எஸ்சி. (என்ஜினீயரிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்கள், மாற்றுத் திறனாளிகள் பட்டப் படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். விண்ணப்பிப்பவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கேட் - 2015 தேர்வை எழுதுபவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். எனவே, இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் கேட் தேர்வை எழுத விண்ணப்பிக்க வேண்டும். ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்திடமிருந்து ஆட்சேபணை இல்லை சான்றிதழைப் பெற வேண்டும்.

கல்வித் தகுதி மற்றும் கேட் தேர்வில் பெறும் சிறப்பிடம் போன்றவற்றின் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு, குழு விவாதத்திற்கு அழைக்கப்படுவர். பின்னர் நேர்முகத் தேர்வும் நடைபெறும். நேர்முகத் தேர்வுக்குப் பிறகு, விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் நிர்வாகப் பணியில் சேரத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். அதில் தகுதி பெறுபவர்கள் ‘எக்ஸிக்யூட்டிவ்’வாக பணியமர்த்தப்படுவார்கள்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலம் 17.12.2014 முதல் 30.01.2015 வரை விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: www.bpclcareers.in

பிஎச்டி மாணவர்களுக்கு ரூ.6 லட்சம் ஸ்காலர்ஷிப்!

 பிரதமரின் ஃபெல்லோஷிப் திட்டத்தின்கீழ் பிஎச்டி படிக்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
 
பிஎச்டி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக பிரதமரின் ஃபெல்லோஷிப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் 100 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். 
 
சிறந்த ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும்  சிறந்த ஆய்வு மாணவர்களை ஈர்க்கவும் இந்த அளவுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. 
 
அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஓர் அங்கமான அறிவியல், பொறியியல் ஆராய்ச்சி போர்டு (எஸ்இஆர்பி), இந்திய தொழில் கூட்டமைப்புடன் (சிஐஐ) இணைந்து இந்த ஃபெல்லோஷிப் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. அதிகபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். இதில் 50 சதவீதப் பணத்தை அறிவியல், பொறியியல் ஆராய்ச்சி போர்டு வழங்கும். மீதமுள்ள 50 சதவீதப் பணத்தை இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஸ்பான்சர் செய்யும் தொழில் நிறுவனம் வழங்கும். 
 
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மருத்துவம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். 
 
இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்க, கடந்த 14 மாதங்களில் பதிவு செய்திருக்க வேண்டும். மாணவர்கள் தங்களது ஆய்வுத் திட்டம் எது என்பதை முடிவு செய்திருக்க வேண்டும். அந்தத் திட்டம் நடைமுறைப் பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.
 
விண்ணப்பத்துடன் மாணவர்கள் அனுப்பும் திட்டம் குறித்து தொழிற்துறையினருடன் கலந்து பேசி, அத்திட்டத்துக்கு தொழிற்துறையினர் ஸ்பான்ஸர் செய்ய விரும்புகிறார்களா என்பது கேட்டறியப்படும். தொழிற் துறையினர் ஸ்பான்சர் செய்ய ஆர்வம் காட்டினால் அந்த மாணவருக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
 
விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பிப்பதற்கு முன்னதாக தகுந்த தொழில் நிறுவனங்களில் ஸ்பான்சர் பெறுவதற்கும் முயற்சிக்கலாம். 
 
பொறியியல் ஆராய்ச்சி போர்டு (எஸ்இஆர்பி), இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவற்றின் சார்பில் அமைக்கப்படும் குழு, இந்த ஃபெல்லோஷிப் பெறத் தகுதியுடைய மாணவர்களை வெளிப்படையாகத் தேர்வு செய்யும். அத்துடன் அவர்களது ஆராய்ச்சித் திட்டங்களையும் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதிருக்கும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் செயும் ஆராய்ச்சிப் பணிகள் திருப்திகரமாக இருந்தால் இந்தக் கல்வி உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும்.  
 
ஆராய்ச்சி செய்வதற்காக பல்கலைக்கழகங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் பதிவு செய்துள்ள தகுதியுடைய மாணவர்கள் இந்த ஃபெல்லோஷிப் பெற ஆன்லைன் மூலம் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். 
 
விவரங்களுக்கு: www.primeministerfellowshipscheme.com