25 September 2014


தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்!

மருத்துவம், பொறியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மேனேஜ்மெண்ட், ஜியாலஜி, ஜியோ பிசிக்ஸ் பாடங்களில் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மத்தியஅரசு நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனம் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
 
மருத்துவம், பொறியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மேனேஜ்மெண்ட், ஜியாலஜி, ஜியோ பிசிக்ஸ் பாடங்களில் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) மாதம் ரூ. 4 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்குகிறது.
 
அதாவது, மொத்தம் 500 மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் வீதம் இந்த உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் 50 சதவீதம் பேர் மாணவிகள். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த 100 மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., எம்.பி.ஏ., எம்.எஸ்சி. - ஜியாலஜி, ஜியோ பிசிக்ஸ் ஆகிய படிப்புகளில் முதலாம் ஆண்டு படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் அனைவரும் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தொலைநிலைக் கல்வி மூலம் பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது.
 
பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ். ஆகிய பட்டப் படிப்புகளில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள், தங்களது பிளஸ் டூ தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
 
எம்.எஸ்சி. - ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், எம்.பி.ஏ., ஆகிய முதுநிலை படிப்புகளில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் தங்களது இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் வருமானம் ஆண்டிற்கு ரூ. 4.50 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது. 1 அக்டோபர்  2014 நிலவரப்படி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் வயது 30-க்குள் இருக்கவேண்டும். வேறு உதவித்தொகை பெறும் மாணவர்கள், இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது.
 
மாணவர்களுடைய மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் இந்தக் கல்வி உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்தில்கொண்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
 
இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும்.
 
பூர்த்தி செய்த விண்ணப்பத்தில், அந்த மாணவர் படிக்கும் கல்வி நிறுவனத்தின் முதல்வரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். வருமான வரிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் உள்பட தேவையான சான்றிதழ் நகல்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
 
விவரங்களுக்கு: www.ongcindindia.com

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.13 லட்சம் சம்பளத்தில் வேலை!

மத்திய அரசு நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு  ரூ.13.95 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்குகிறது. இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் ‘கேட்’ தேர்வை எழுத வேண்டும்.

ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் மத்திய அரசு நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் எலெக்ட்ரிக்கல் பிரிவில் எக்ஸிகியூட்டிவ் டிரெயினி பணிகளில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. இந்தப் பணியில்  சேர விரும்புபவர்கள் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரிக்கல் (பவர்), எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் பிஇ, பிடெக், பிஎஸ்சி (என்ஜினீயரிங்) பட்டப் படிப்புகளில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரிக்கலில் ஏஎம்ஐஇ தேர்வில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் இப்பணியில் சேர விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் அதாவது 14-8-2015-க்குள் இறுதியாண்டு தேர்வு முடிவுகளைப் பெறுவதற்குத் தகுதியுடைய மாணவர்களும் இப்பணியில் சேர விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு, இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி 28 வயதுவரை இருக்கலாம். கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகளும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு ஏற்ப வழங்கப்படும் சலுகை தவிர, கூடுதலாக வயது வரம்பில் 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் பவர் கிரிட் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை.

இப்பணியில் சேர விரும்புபவர்கள் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் கேட் தேர்வை (GATE 2015) எழுத வேண்டும். கேட்-2014 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளின் கேட் தேர்வு மதிப்பெண்கள் ஏற்கப்பட மாட்டாது. எனவே, கேட்-2015 தேர்வுக்கு எழுத அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கேட் தேர்வு குறித்த விவரங்களை அதற்கான இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

பவர் கிரிட் நிறுவனத்தில் சேர விரும்புபவர்கள் முதலில் கேட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், கேட் தேர்வு பதிவு எண்ணுடன் பவர் கிரிட் நிறுவன இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் வருகிற ஜனவரி 15-ஆம் தேதி முதல் பிப்ரவரி 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத் தேர்வு மே-ஜூன் வாக்கில் நடைபெறும்.

கேட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குரூப் டிஸ்கஷன் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து நேர்காணல் இருக்கும். கேட் தேர்வுக்கு 85 சதவீத மதிப்பெண்களும் குரூப் டிஸ்கஷனுக்கு 3 சதவீத மதிப்பெண்களும் நேர்முகத் தேர்வுக்கு 12 மதிப்பெண்களும் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் இருக்கும். கலர் பிளைண்ட்னஸ் இருக்கக் கூடாது.

தேர்வு செய்யப்படும் மாணவர்கள், பவர் கிரிட் நிறுவனத்தின் மையங்களில் ஓராண்டு பயிற்சி பெற வேண்டும். பிளானிங், டிசைன், என்ஜினீயரிங், குவாலிட்டி அஸ்யூரன்ஸ், இன்ஸ்பெக்ஷன், எரெக்ஷன், டெஸ்டிங் அண்ட் கமிஷனிங் சப்-ஸ்டேஷன், டிரான்ஸ்மிஷன் லைன், பவர் சிஸ்டம் புரடக்டிவ் ரிலேஸ், சப்-ஸ்டேஷன் ஆட்டோமேஷன் சிஸ்டம், பவர் லைன் கேரியர் கம்யூனிக்கேஷன், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் சிஸ்டம், இம்ப்ளிமென்டேஷன் ஆஃப் ஸ்மார்ட் கிரிட், ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட், கன்ஸ்ட்ரக்ஷன், ஆபரேஷன், மெயின்டனன்ஸ்... இப்படி பல்வேறு பணிகள் இருக்கும்.

இப்பணிகளில் சேரத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் ஆண்டுக்கு ரூ.7.78 லட்சம் வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு பணியில் அமர்த்தப்பட்ட பிறகு ஆண்டுக்கு ரூ.13.95 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். அத்துடன், இந்த நிறுவனத்தில் பணியில் சேருபவர்களுக்கு வீட்டுக் கடன் வசதி, மருத்துவ வசதி, வருங்கால வைப்பு நிதி, பென்ஷன், கிராஜுட்டி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் கிடைக்கும். இப்பணியில் சேரத் தேர்வு செய்யப்படுபவர்கள், இந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாவது பணிபுரிய வேண்டும். இது குறித்து, ரூ.1 லட்சத்துக்கான உறுதிமொழிப் பத்திரம் அளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50 ஆயிரத்துக்கான உறுதி மொழிப் பத்திரம் அளித்தால் போதும். இந்தப் பணியில் சேரத் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலோ அல்லது வெளிநாட்டிலோ பணியில் அமர்த்தப்படுவார்கள். நல்ல ஊதியத்தில் சேர விரும்பும் பொறியியல் பட்ட மாணவர்களுக்கு ஏற்ற அரசு நிறுவனப் பணி இது.

விவரங்களுக்கு: www.powergridindia.com

அனல் மின்நிலையங்களில் பணிபுரிய ஓராண்டுப் படிப்பு


அனல் மின்நிலையங்களில் வேலை செய்ய விரும்புபவர்கள் நெய்வேலியில் உள்ள நேஷனல் பவர் டிரெயினிங் இன்ஸ்டிட்யூட்டில் ஓராண்டு போஸ்ட் டிப்ளமோ படிப்பைப் படிக்கலாம்.
 
நமது நாட்டில் எந்த அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்தாலும்கூட மின்சாரப் பற்றாக்குறை என்பது தவிர்க்க இயலாததாக உள்ளது. இந்நிலையில், மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, இத்துறையில் உரிய பயிற்சி பெற்ற பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
 
இந்த நிலையில் எரிசக்தி துறை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் வகையில் நேஷனல் பவர் டிரெயினிங் இன்ஸ்டிட்யூட்டை மத்திய எரிசக்தி அமைச்சகம் தொடங்கியது. 1965-ம் ஆண்டில் நெய்வேலியில் தொடங்கப்பட்ட இந்த பவர் டிரெயினிங் இன்ஸ்டிட்யூட், நாட்டிலேயே முதலாவது பவர் டிரெயினிங் பயிற்சி நிலையமாகும். இந்தப் பயிற்சி நிலையத்தில் தெர்மல் பவர் பிளாண்ட் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் போஸ்ட் டிப்ளமோ படிப்பைப் படிக்கலாம். 
 
நமது எரிசக்தித் துறைக்குத் தேவையான தொழில்நுட்பப் பணியாளர்களை உருவாக்குவதற்கு ஏற்ற வகையில் இந்த ஓராண்டு படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் படிப்பின் முதல் இரண்டு வாரங்கள் அனைத்து மாணவர்களுக்கும் இணைப்புப் பாலமாக வகுப்புகள் நடத்தப்படும். அதாவது, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பாடத்திலும் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடத்திலும் அறிமுகப் பாடங்கள் இருக்கும்.
 
மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடங்கள்  தவிர, அனல் மின்நிலையங்களில் நேர்முகப் பயிற்சி பெறவும் வாய்ப்பளிக்கப்படும். இந்தப் போஸ்ட் டிப்ளமோ பயிற்சி பெறுபவர்கள், அனல் மின்நிலையங்களில் பணிபுரிவதற்கேற்ற ஓ அண்ட் எம் காம்பிட்டன்சி சான்றிதழைப் பெற தகுதி பெற முடியும். இந்தப் படிப்பில் சேர்ந்து படித்து முடித்த மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
 
இந்த ஓராண்டு போஸ்ட் டிப்ளமோ படிப்பில் 77 இடங்கள் உள்ளன. இதில் 25 சதவீத இடங்கள் ஸ்பான்சர் செய்யப்படும் மாணவர்களுக்கானவை. அட்மிஷனில் மத்திய அரசின் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ பெற்ற மாணவர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
 
விண்ணப்பக் கட்டணம் ரூ.700. மாணவர்களின் பெயர், தந்தையின் பெயர், முகவரி, தொலைபேசி எண், வயது, கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை (விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளபடி) தனி காகிதத்தில் எழுதி, புகைப்படத்துடன் விண்ணப்பக் கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட்டையும் இணைத்து இம்மாதம் 29-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். தேவையான சான்றிதழ்களின் நகல்களுக்கு சான்றொப்பம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டியதிருக்கும்.
 
இப்படிப்புக்குக் கட்டணம் ரூ.1.35 லட்சம். அத்துடன் சேவைக் கட்டணமும் உண்டு. படிப்புக் கட்டணத்தை இரண்டு தவணைகளில் செலுத்தலாம். இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதியும் உண்டு. முன்னால் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விடுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். 
 
நெய்வேலியில் உள்ள பவர் டிரெயினிங் இன்ஸ்டிட்யூட்டில் போஸ்ட் டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் டிப்ளமோ மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
 
விவரங்களுக்கு: www.nptineyveli.in

ஐஏஎஸ் தேர்வு: அரசு இலவசப் பயிற்சி!

தமிழக அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு இலவசப் பயிற்சியில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தின்கீழ் இயங்கும் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம், இலவசப் பயிற்சியை அளித்து வருகிறது. இங்கு இலவசப் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு முதல் 200-லிருந்து 225 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆதி திராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 92 இடங்களும், அருந்ததியருக்கு 18 இடங்களும், பழங்குடியினருக்கு 3 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 40 இடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு 54 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 7 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 7 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 4 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

முழு நேரப் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு இலவச தங்கும் விடுதி வசதியும் செய்து தரப்படுகிறது. பெண்களுக்கென தனி விடுதி வசதியும் உண்டு. தரமான, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், 21 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம், 24 மணி நேரம் இணையதள வசதி, நேர்த்தியான வகுப்பறை... இப்படி மாணவர்களுக்கேற்ற பல்வேறு வசதிகள் இங்கு உள்ளன. அத்துடன், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் வழிகாட்டுதல்கள், தன்முனைப்புப் பயிற்சிகள், ஊக்குவிப்புப் பயிற்சிகள், பாடவாரியான பயிற்சிகள், குழு விவாதம்... இப்படி மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இங்கு பயிற்சி பெற விரும்புவோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 1.8.2015 நிலவரப்படி விண்ணப்பதாரர், குறைந்தபட்சம் 21 வயது ஆனவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்-முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

முழுநேரப் பயிற்சியில் சேர தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு உணவு கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம், படிப்புக் கட்டணம் எதுவும் இல்லை. ஆனால், இப்பயிற்சியில் சேரத் தேர்ந்தெடுக்கப்படும் பொதுப்பிரிவினர் மட்டும் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அனைத்துப் பிரிவினரும் நூலக காப்புக் கட்டணமாக ரூ. 3 ஆயிரம் செலுத்த வேண்டும். பயிற்சியின் முடிவில் இந்த காப்புக் கட்டணம் திருப்பி தரப்படும். முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறும் மாணவருக்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கும், நேர்காணல் தேர்வுக்கு தகுதி பெறுபவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் அரசால் வழங்கப்படும்.

இங்கு பகுதி நேரப் பயிற்சி பெறுவதற்கு 100 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இப்பயிற்சி பெறுவதற்கு பயிற்சிக் கட்டணமாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். நூலகக் காப்புத்தொகையாக ரூ. 3 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்தத் தொகை பயிற்சியின் முடிவில் திருப்பித் தரப்படும். பகுதி நேரப் பயிற்சி வகுப்புகளில் சேருவோருக்கு, வாராந்திர நாட்களில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு நேரமாகவும் பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு உணவு, தங்கும் விடுதி வசதி வழங்கப்பட மாட்டாது.

முழு நேரப் பயிற்சியிலும், பகுதி நேரப் பயிற்சியிலும் சேர விரும்பும் மாணவர்கள் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் நடத்தும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு நவம்பர் 23-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், வேலூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், தர்மபுரி, சிவகங்கை ஆகிய ஊர்களில் இத்தேர்வை எழுதலாம். இந்த இரண்டு மணி நேரத் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இந்திய வரலாறு மற்றும் தேசிய இயக்கம், இந்திய மற்றும் உலகப் புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாக முறை, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், சுற்றுப்புறச் சூழ்நிலை தொடர்பான பொதுவிவாதங்கள், பருவநிலை மாற்றங்கள் மற்றும் உயிரினப் பரிணாம வளர்ச்சி, அடிப்படை எண் அறிவு, பகுத்தறியும் திறன், பொதுப்புத்திக் கூர்மை மற்றும் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றிலிருந்து, கேள்விகள் கேட்கப்படும்.

ஆங்கில மொழியில் 100 கேள்விகளைக் கொண்ட இந்த நுழைவுத் தேர்வுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள். நுழைவுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

இத்தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள், அலுவலக வேலை நாட்களில் (காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) தங்களது ஜாதி, வயது மற்றும் பட்டப்படிப்புச் சான்றுகளின் நகல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து, உரிய விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களிடமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். சென்னையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் சென்னையில் உள்ள பயிற்சி மைய வளாகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 14.10.2014

விவரங்களுக்கு: http://civilservicecoaching.com

தொலைபேசி: 044 – 24621475
 

தேர்ச்சி எவ்வளவு?

அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று சிவில் சர்வீஸ் பணிகளில் சேர்ந்தவர்கள் விவரம்:

    2011 - 47 பேர்
    2012 - 49 பேர்
    2013 - 57 பேர்