6 February 2014

தெற்கு ரயில்வேயில் 1,666 பேருக்கு வேலை

தெற்கு ரயில்வேயில் 1,666  பணியிடங்களுக்கு தகுதியுடையவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. அசிஸ்டண்ட் லோகோ பைலட் (ஏ.எல்.பி.) மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சேர விரும்புபவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், எலெக்ட்ரீஷியன், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மில்ரைட், ரேடியோ அண்ட் டி.வி. மெக்கானிக், எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மோட்டார் வாகன மெக்கானிக், வயர்மேன், டீசல் மெக்கானிக், டர்னர், பெயிண்டர், கார்பெண்டர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரர்கள் 18 வயதிலிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.40 (பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்களுக்கு). தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் படைவீரர்கள், கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

அசிஸ்டண்ட் லோகோ பைலட் (ஏ.எல்.பி.) பணியில் பொதுப் பிரிவினருக்கு 157 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 45 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 18 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 63 காலியிடங்களும் உள்ளன. இந்தப் பணிக்கு  மொத்தம் 283 காலியிடங்கள் உள்ளன. டெக்னீஷியன் பணியில் பொதுப் பிரிவினருக்கு 782 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 347 காலியிடங்களும், பழங்குடியினருக்கு  275 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு  262 காலியிடங்களும் என மொத்தம்  1,383 காலியிடங்கள் உள்ளன.

எழுத்துத் தேர்வு எப்படி இருக்கும்?: எழுத்துத் தேர்வு மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அதற்கான எழுத்துத் தேர்வில் ஜெனரல் அவேர்னஸ், மேத்மேட்டிக்ஸ், ஜெனரல் இன்டலிஜென்ஸ், ரீசனிங், ஜெனரல் சயின்ஸ், டெக்னிக்கல் எபிலிட்டி என ஆறு பிரிவுகளில் இருந்து 100 முதல் 120 கேள்விகள் வரை கேட்கப்படும். அதற்கு 90 நிமிடங்கள் உள்ளன. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி?:
விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். விண்ணப்பப் படிவத்தில் நீலம்  அல்லது கறுப்பு பால் பாயிண்ட் பேனாவால் அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். தற்போது எடுக்கப்பட்டிருக்கும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை, ‘The Assistant Secretary, Railway Recruitment Board, Chennai' payable at Chennai என்ற முகவரிக்கு டி.டி. எடுத்து அனுப்ப வேண்டும். அல்லது  விண்ணப்பக் கட்டணத்தை ’The Assistant Secretary, Railway Recruitment Board, Chennai' payable at 'GPO, Chennai’ என்கிற முகவரிக்கு இந்தியன் போஸ்டல் ஆர்டரும் அனுப்பலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கட்டணம் செலுத்திய டி.டி. அல்லது போஸ்டல் ஆர்டர் ரசீதையும், பத்தாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. சான்றிதழ் நகலையும், சாதிச் சான்றிதழ் நகலையும் சேர்த்து அனுப்பி வைக்கவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Assistant Secretary, Railway Recruitment Board, No.5, Dr.P.V. Cherian Crescant Road, Behind Ethiraj College, Egmore, Chennai - 600008.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 17.02.2014
தேர்வு நாள்: 15.06.2014
விவரங்களுக்கு: http://rrcb.gov.in/

தில்லி தெற்காசிய பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன் முதுநிலை படிப்புகள்

மோ.கணேசன்

சார்க் நாடுகள்  அமைப்பின் முயற்சியால்  தில்லியில் தொடங்கப்பட்டுள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் சேரவிரும்பும் மாணவர்கள் அதற்கான நுழைவுத்தேர்வை எழுத விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

இந்தியா, இலங்கை, பூட்டான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளை அடக்கிய சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் முதுநிலை படிப்புகளைப் படிக்க உதவும் வகையில் சார்க் நாடுகள் அமைப்பின் முயற்சியால் கடந்த 2010-ஆம் ஆண்டு, தில்லியில் தெற்காசியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. சர்வதேசத் தரத்தில் ஆசிரியர்கள், மிகச்சிறந்த நூலக வசதி, நவீன அறிவியல் ஆய்வுக்கூடங்கள், 24 மணி நேர இலவச இண்டர்நெட் இணைப்பு வசதி, மிகக்குறைந்த செலவில் ஹாஸ்டல் வசதி போன்ற நவீன வசதிகள் கொண்டது இப்பல்கலைக்கழகம். பொருளாதாரரீதியில் பின்தங்கியிருந்தாலும் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கும். ஆவை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற பல்கலைக்கழகம் இது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் அப்ளைடு மேத்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் எம்எஸ்சி படிப்பும் இண்டர்நேஷனல் ரிலேஷன்ஸ், டெவலப்மெண்ட் எக்கனாமிக்ஸ், சோஷியாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் எம்ஏ படிப்பையும் படிக்கலாம். அத்துடன், எல்எல்எம் எனப்படும் மாஸ்டர் ஆப் லா படிப்பும் இங்கு உள்ளது. இதுதவிர, எம்பில், பிஎச்டி ஆய்வுப் படிப்புகளையும் படிக்க வாய்ப்புகள் உண்டு. முதுகலைப் படிப்புகளில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 30 மாணவர்கள் சேர்க்கப்படுவர். 30 மாணவர்களில் 15 இடங்கள் இந்திய மாணவர்களுக்கும், மீதமுள்ள 15 இடங்கள் பிற சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எம்ஏ மற்றும் எல்எல்எம் படிப்புகளில் சேர விரும்புவோர் தங்களது இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடனும், எம்எஸ்சி படிப்பில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்புகளை ரெகுலர் முறையில் படித்து முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு முதுநிலை படிப்பிலும் சேருவதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்ற விவரங்கள் இணையதளத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக தனி நுழைவுத் தேர்வு சார்க் நாடுகளின் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, குவாஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர். கொல்கத்தா, லக்னோ, மும்பை, சண்டிகார், பாட்னா மற்றும் தில்லி ஆகிய நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும். எந்தப் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர விரும்புகிறார்களோ அந்தப் பாடப் பிரிவிலிருந்தும், ஜெனரல் அவேர்னஸ், நாட்டு நடப்புகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையிலும், விரிவாக பதில் அளிக்கும் முறையிலும் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 100.

படிப்புக் கட்டணம்: இந்தியா உள்ளிட்ட சார்க் நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஓராண்டுக்கான படிப்புக் கட்டணம் 880 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் தோராயமாக 54 ஆயிரம் ரூபாய் ஆகும். விடுதி வசதி உண்டு. விடுதியில் தங்குவதற்கு மாத வாடகை ரூ. 500. உணவுக்கட்டணம் தனி.

கல்வி உதவித் தொகை: தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சேரும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித் தொகைகள் கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன. நுழைவுத்தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பிரசிடெண்ட் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். இந்த ஸ்காலர்ஷிப்பில் முழு படிப்புக் கட்டணமும், விடுதிக் கட்டணமும் இலவசம். அத்துடன், அந்த மாணவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படும். ஒவ்வொரு நாட்டிலும் நுழைவுத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு இந்த பிரசிடெண்ட் ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.

பொருளாதார அளவில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மாதம் 3 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரையில் உதவித்தொகை வழங்கப்படும். ஸ்காலர்ஷிப் அனைத்தும் ஓராண்டுக்கு வழங்கப்படும். அந்த ஓராண்டில் மாணவரின் படிப்புத்திறனைப் பொருத்து உதவித் தொகை அடுத்த ஆண்டிற்கு நீட்டிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 600. டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு என ஆன்லைன் மூலமாகவும், டிமாண்ட் டிராப்ட் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2014
நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி: 06.04.2014.
விவரங்களுக்கு: http://sau.ac.in



‘‘தமிழக மாணவர்களிடம்  போதிய விழிப்புணர்வு இல்லை’’

கள்ளக்குறிச்சிதான் எனக்கு சொந்த ஊர்.  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பிஇ படித்து முடித்துவிட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது தெற்காசிய பல்கலைக்கழகத்தின் விளம்பரத்தினைப் பார்த்து எம்எஸ்சி, மேத்மேட்டிக்ஸ் படிப்புக்கு விண்ணப்பித்தேன்.

நுழைவுத்தேர்வு எளிமையாகத்தான் இருந்தது. அப்படி ஒன்றும் கடினமானதாக இல்லை. இந்த நுழைவுத்தேர்வுக்குத் தயாராக வேண்டுமெனில் இந்த இணையதளத்தில் பாடத்திட்டங்களும், நடைபெற்று முடிந்த தேர்வுகளின் வினாத்தாள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை டவுன்லோடு செய்து பயிற்சி செய்தாலே எளிதில் தேர்ச்சி பெற்றுவிடலாம்.

உலகத்தரம் வாய்ந்த கல்வி முறை, சிறந்த நூலகம், பல்வேறு நாட்டு மாணவர்களுடன் இணைந்து படிக்கும் வசதி, குறைந்த கட்டணத்தில் ஹாஸ்டல் வசதி இப்படி எல்லா வகையிலும் தெற்காசியப் பல்கலைக்கழகம் ஒரு படி மேலே இருக்கிறது. இங்கு படிப்பது குறித்து தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

என் அப்பா பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி புரிகிறார். ஆண்டு வருமானம் 3 லட்சம் அவருக்கு. இந்த வருமானத்தின் அடிப்படையில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் இந்தப் பல்கலைக்கழகத்தின் மூலம் எனக்கு கிடைக்கிறது. இதனால் பொருளாதார நெருக்கடியின்றி இங்கு படித்துவருகிறேன். சென்ற ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து மூன்று பேர் இங்கு படிக்க வந்தோம். அதில் இரண்டு பேர் இங்கிருந்தபடியே சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்து விட்டனர். ஆய்வுப் படிப்புகளில் ஈடுபடவேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கு இந்தப் பல்கலைக்கழகம் சரியானதொரு தேர்வு"

- தீபக் பாண்டியன்,
2-ஆம் ஆண்டு எம்எஸ்சி,
தெற்காசியப் பல்கலைக்கழகம்

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வு பட்டதாரி மாணவர்களுக்கு மத்திய அரசு வேலை!

பொன்.தனசேகரன்

மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வை எழுத வேண்டும்.


மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்புபவர்களுக்காக ‘ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்’ ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வை (Combined Graduate)  நடத்துகிறது. சென்ட்ரல் செக்ரட்டேரியேட் சர்வீஸ், சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன், இன்டலிஜென்ஸ் பீரோ, ரயில்வே அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், ஏஎஃப் தலைமையகம், மற்ற அமைச்சகங்கள், துறைகள், மற்றம் அரசு அமைப்புகளில் உதவியாளர் பணிகளில் சேர விரும்புபவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும். அத்துடன், வருமானவரித் துறை இன்ஸ்பெக்டர், சுங்க வரித்துறை இன்ஸ்பெக்டர், தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் (எக்ஸாமினர்), அசிஸ்டெண்ட் என்போர்ஸ்மெண்ட் அதிகாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் (சிபிஐ), இன்ஸ்பெக்டர் ஆஃப் போஸ்ட்ஸ் (தபால் துறை) டிவிஷனல் அக்கவுன்டண்ட் (சிஏஜி அலுவலகங்களில்), ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் கிரேடு-2, போதை மருந்து தடுப்பு இன்ஸ்பெக்டர் (சென்ட்ரல் பீரோ ஆஃப் நார்காட்டிக்ஸ்) ஆகிய பணிகளில் சேர விரும்புகிறவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும். ஆடிட்டர், அக்கவுன்டண்ட், ஜூனியர் அக்கவுன்டண்ட், கிளார்க் (அப்பர் டிவிஷன் கிளார்க்), வரி உதவியாளர், கம்பைலர் போன்ற பணிகளில் சேர விரும்புபவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும்.

இந்தப் பணிகளில் சேர பட்டப் படிப்புப் படித்திருக்க வேண்டும். கம்பைலர் பணியில் சேர விரும்புபவர்கள், பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை பட்டப் படிப்பில் கட்டாயப் பாடமாகவோ அல்லது விருப்பப் பாடமாகவோ எடுத்துப் படித்திருக்க வேண்டும். ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் கிரேடு-2 பணியில் சேர விரும்புபவர்கள் பட்டப் படிப்பில் புள்ளியியல் பாடத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும் அல்லது பட்டப் படிப்பில் கணிதத்தை முக்கியப் பாடமாக எடுத்து, புள்ளியியலையும் ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் அல்லது பட்டப் படிப்பில் பொருளாதாரத்தை முக்கியப் பாடமாக எடுத்து, அத்துடன் புள்ளியியலையும் ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது பட்டப் படிப்பில் வணிகவியல் பாடத்துடன், புள்ளியியலை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தொலைநிலைக் கல்வி அல்லது திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டங்கள், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டியது அவசியம். உதவியாளர் பணியில் சேர விரும்புபவர்களுக்கு கம்ப்யூட்டர் திறன் இருக்க வேண்டியது அவசியம்.

வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர், மத்திய சுங்க வரித் துறை இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் (தடுப்பு அதிகாரி), இன்ஸ்பெக்டர் (எக்ஸாமினர்), இன்ஸ்பெக்டர் ஆஃப் போஸ்ட்ஸ், அசிஸ்டெண்ட் என்ஃபோர்ஸ்மெண்ட் ஆபீசர், இன்ஸ்பெக்டர் (சிபிஎன்) கம்பைலர், டிவிஷனல் அக்கவுன்டண்ட், ஆடிட்டர்ஸ், அப்பர் டிவிஷன் கிளார்க், டாக்ஸ் அசிஸ்டெண்ட்ஸ், ஜுனியர் அக்கவுண்டன்ட் அண்ட் அக்கவுண்டன்ட், சப் இன்ஸ்பெக்டர் (சிபிஎன்) ஆகிய பணிகளில் சேர விரும்புபவர்கள் 18 வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும் அதாவது 2-01-1987க்கு முன்னதாகவோ அல்லது 1-01-1996க்குப் பிறகு பிறந்தவர்களாகவோ இருக்கக் கூடாது.


ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிக்கேட்டர் கிரேடு-2 பணியில் சேர விரும்புவர்களுக்கு 26 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. அதாவது, 2-01-1988க்கு முன்னதாகப் பிறந்திருக்கக்கூடாது. சிபிஐ பிரிவில் அசிஸ்டெண்ட், சப் இன்ஸ்பெக்டர் பணியில் சேர விரும்புபவர்கள், 20 வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 2-01-1987க்கு முன்னதாகவோ அல்லது 1-01-1994க்குப் பிறகு பிறந்தவர்களாகவோ இருக்கக் கூடாது.
தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் 15 ஆண்டுகளும் விலக்கு அளிக்கப்படும். இதேபோல மற்ற சில பிரிவினருக்கும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படுகிறது. இந்தப் பணிகளில் சேருவதற்காக தகுதி மற்றும் விதிமுறைகள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த எழுத்துத் தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது. முதலில் அப்ஜெக்ட்டிவ் முறையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதையடுத்து குறிப்பிட்ட பணிகளுக்காக தேவையைக் கருத்தில் கொண்டு கம்ப்யூட்டர் புரபிசியன்சி டெஸ்ட், இன்டர்வியூ, ஸ்கில் டெஸ்ட் போன்ற தேர்வுகள் நடத்தப்படும். கோவை, சென்னை, மதுரை, புதுச்சேரி, திருநெல்வேலி, திருச்சி உள்பட நாட்டின் பல்வேறு  முக்கிய நகரங்களில் இந்தத் தேர்வை எழுதலாம். இந்த TIER-1  எழுத்துத் தேர்வு ஏப்ரல் 27, மே 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் அதைத் தொடர்ந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தேர்வு நடைபெறும். TIER-2 எழுத்துத் தேர்வு (மூன்றாம் தாள்) ஆகஸ்ட் 30-ஆம் தேதியும், முதல் மற்றும் இரண்டாம் தாள்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும் நடைபெறும்.


ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் தவிர, நேர்காணலுடன் கூடிய பணிகளில் சேருவதற்கு டயர்-1 தேர்வில் ஜெனரல் இன்டலிஜன்ஸ், ரீசனிங், பொது விழிப்புணர்வு, குவான்டிட்டேட்டிவ் ஆப்டிட்யூட், இங்கிலீஷ் காம்ப்ரிஹென்சன் ஆகியவற்றில் வினாக்கள் கேட்கப்படும். 2 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 200. டயர்-2 தேர்வில் குவான்டிட்டேட்டிவ் எபிலிட்டீஸ் பிரிவில் 100 கேள்விகள் கேட்கப்படும். இந்த இரண்டு மணி நேரத் தேர்வுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். இங்கிலீஷ் லாங்வேஜ் அண்ட் காம்ப்ரிஹென்சன் பிரிவுக்கு  200 மதிப்பெண்கள். இதற்கும் விடையளிக்க 2 மணி நேரம் வழங்கப்படும். இதையடுத்து நேர்காணலுக்கு 100 மதிப்பெண்கள். உதவியாளர் (சிஎஸ்எஸ்) பணியில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மட்டும் கம்ப்யூட்டர் புரபிசியன்சி டெஸ்ட் நடத்தப்படும்.

நேர்காணல் இல்லாத கம்பைலர் அல்லாத வேறு பணிகளுக்கு டயர்-1, டயர்-2 தேர்வுகள் இதேபோல இருக்கும். வரி உதவியாளர் பணிக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு டேட்டா என்ட்ரி ஸ்கில் டெஸ்ட் நடத்தப்படும்.
ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் (கிரேடு-2) பணியில் சேர விரும்புபவர்களுக்கு டயர்-1 தேர்வு ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது போல இருக்கும். டயர்-2 தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கு 400 மதிப்பெண்களும் மூன்றாவது தாளுக்கு (புள்ளியியல்) 200 மதிப்பெண்களும் வழங்கப்படும். அத்துடன் நேர்முகத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதேபோல கம்பைலர் பணிக்கு டயர்-1, டயர்-2 தேர்வு இருக்கும். ஆனால் நேர்காணல் இருக்காது. இத்தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இத்தேர்வு எழுத விரும்புபவர்களுக்கான கட்டணம் ரூ.100. பெண் விண்ணப்பதாரர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் போன்றவர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பலாம் அல்லது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம். எந்தப் பணிக்கு விண்ணப்பிக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தை ஒரு முறைக்கு மேல் அனுப்பக்கூடாது. விண்ணப்பிக்கும் முன்னதாக தகுதிகள், தேர்வு குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பது நல்லது. பணி நியமனத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்படும். இடஒதுக்கீட்டுக்கான பயன்களைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.


இந்தப் போட்டித் தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். அசாம், மேகாலயா, அருணாசலப் பிரதேசம், மிசோராம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், காஷ்மீர், இமாசலப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் போன்ற தொலை தூரப் பகுதிகளைச் சேர்ந்த மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். முதலாவது பிரிவின் கீழ் உள்ள பணிகளுக்கு ஆன்லைன் மூலம் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையும் இரண்டாவது பிரிவுப் பணிகளுக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி வரையிலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு வழங்கப்படும் பதிவு எண்ணை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளவும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள், பிரிண்ட் அவுட்டுகளை தனியே அனுப்ப வேண்டியதில்லை. இத்தேர்வு குறித்த விரிவான தகவல்கள், ‘எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்’ இதழிலும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் போட்டித் தேர்வை எழுத பெண்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விவரங்களுக்கு: http://ssconline.nic.in



இலவச எம்டெக் படிப்பு: படித்ததும் உடனடி வேலை

ஐஐடி, என்ஐடி கல்வி நிறுவனங்களில் எம்டெக் கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் படிக்க என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்களுக்கு  கல்வி உதவித் தொகையும் வழங்கி,  படித்து முடித்த தகுதியான மாணவர்களுக்கு  ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளத்தில் வேலையும் வழங்குகிறது எல் அண்ட் டி நிறுவனம்.

இந்தியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் எல் அண்ட் டி என்று அழைக்கப்படும் லார்சன் அண்ட் டியூப்ரோ. சிறந்த திட்ட மேலாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், சென்னை மற்றும் தில்லி ஐஐடிக்கள், திருச்சி, சூரத்கல் ஆகிய இடங்களில் உள்ள என்ஐடிகளில் எம்டெக் கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் படிப்பை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி ஸ்பான்சர் செய்கிறது இந்த நிறுவனம்.

இந்த இரண்டு ஆண்டு படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டப் படிப்பில் இந்த ஆண்டு தேர்ச்சி பெறுபவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் 10-ஆம் வகுப்பிலும் 12-ஆம் வகுப்பிலும் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும். சிஜிபிஏ என்றால் 10-க்கு 6.50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பாடப் பிரிவுகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்கள் (சிஜிபிஏ என்றால் 10-க்கு 6.75 மதிப்பெண்கள்) எடுக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 1-07-2014 நிலவரப்படி, 23 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. உயரம் குறைந்தது 160 சென்டி மீட்டரும் குறைந்த பட்சமாக 50 கிலோ எடை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். பார்வைத் திறனும் கணக்கில் கொள்ளப்படும். அதாவது, மாணவர்கள் கண்ணாடி அணிந்திருந்தால் பார்வைத் திறன் குறைபாடு + அல்லது - 5 வரை இருக்கலாம்.


எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஐஐடிக்கள் மற்றும் என்ஐடிக்கள் எழுத்துத் தேர்வையும் தொடர்ந்து நேர்முகத் தேர்வையும் நடத்தும். அதன் அடிப்படையில் மாணவர்கள் இந்த 24 மாத கால முதுநிலை பட்டப் படிப்பிற்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இந்தப் படிப்புக்கான படிப்புக் கட்டணத்தை எல் அண்ட் டி நிறுவனமே செலுத்தி விடும். அத்துடன் மாணவர்களுக்கு, மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.  இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளத்தில் வேலையில் சேர அனுமதிக்கப்படுவர். இந்தத் திட்டத்தின்கீழ் படிக்கச் சேரும் மாணவர்கள், வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டால், குறைந்தது ஐந்து ஆண்டுகள் இந்த நிறுவனத்தில் பணி செய்ய உத்தரவாதம் அளித்து  ரூ.3 லட்சத்துக்கான உறுதிப் பத்திரம் எழுதித் தர வேண்டும்.
உதவித் தொகையுடன் கூடிய, இந்த எம்டெக் படிப்பில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், இந்தப் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.lntecc.com