15 July 2014

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாம்!

ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை ஆன்லைன் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.

தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ந்து வரும் முக்கியத் துறை. தற்போது, கம்ப்யூட்டர் துறையிலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஓபன் சோர்ஸ்  சாஃப்ட்வேர்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, இது தொடர்பான தொழில்நுட்பங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களும் அதுதொடர்பான புதிய தொழில்நுட்பங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் குறித்து அறிந்த தொழில்நுட்பவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் அதாவது  MSc (CS-FOSS)  என்ற படிப்பை சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தங்களது தகுதியை உயர்த்திக் கொள்ளவும் இந்த ஆன்லைன் படிப்பு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டப் படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியல் பாடத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்த மாணவர்கள் சேரலாம். பிளஸ் டூ நிலையில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, ஏதாவது ஒரு பட்டப் படிப்பு படித்த மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பிசிஏ மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். ஆன்லைன் மூலம் நடத்தப்படும் படிப்பு என்பதால் வேலையில் இருப்பவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். பிசிஏ, பிஎஸ்சி படித்துவிட்டு சாஃப்ட்வேர் மற்றும் ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் தங்களது தகுதியை உயர்த்திக்கொள்ள இந்தப் படிப்பு உதவியாக இருக்கும். அதற்காகப் பணியை விட்டு விட்டோ அல்லது விடுமுறை எடுத்துக் கொண்டோ இந்தப் படிப்பைப் படிக்க வேண்டியதில்லை. சாஃப்ட்வேர் அல்லது ஐ.டி. அல்லாத வேறு துறைகளில் என்ஜினீயரிங் படிப்புகளைப் படித்து விட்டு, சாஃப்ட்வேர் மற்றும் ஐ.டி. துறைகளில் வேலை செய்ய விரும்பும் மாணவர்களுக்கு இந்தத் துறை சார்ந்த படிப்பைப் படித்து, தங்களது தொழில்நுட்பத் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான களமாக இந்தப் படிப்பு அமையும். இதுவரை வேலை கிடைக்காத என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பட்டதாரிகள் இந்தப் படிப்பின் மூலம் தங்களது வேலைவாய்ப்புக்கான சாத்தியங்களை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு எதுவும் கிடையாது.

அண்ணா  பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் துறை மூலம் நடத்தப்படும் இந்த ஆன்லைன் படிப்புக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் - கேபிசி ஆராய்ச்சி மையம் மேற்கொள்கிறது. வாரத்தில் இருமுறை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். இதன் மூலம் துறை சார்ந்த பேராசிரியர்களும் நிபுணர்களும் வகுப்புகள் எடுப்பதை ஆன்லைன் மூலம் கேட்டுக் கற்க முடியும். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆன்லைன் மூலம் கேட்டுத் தெளிவு பெறலாம் அல்லது இ-மெயில், சாட்டிங் மூலம் தொடர்புகொண்டு விளக்கம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் படிப்பை மாணவர்களுக்கு ஆர்வமிக்கதாக்கும் வகையில் இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ஸ்லைடுகள், ஆடியோ, வீடியோ வடிவில் பாடங்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன், அடிப்படைத் தொழில்நுட்பங்கள் குறித்து தரம் வாய்ந்த சில புத்தகங்களையும் மாணவர்கள் வாங்கிப் படிக்கலாம். இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு செய்முறைக்கும் புராஜக்ட்டுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மாணவர்கள் இந்தப் படிப்பை இரண்டு ஆண்டுகளில் நான்கு செமஸ்டர்களில் முடிக்க வேண்டும். அதேசமயம், மாணவர்கள் விரும்பினால் மேலும் கால அவகாசம் எடுத்துக் கொண்டு படிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. அதாவது  6 ஆண்டுகளுக்குள் (12 செமஸ்டர்கள் வரை) இந்தப் படிப்பை முடிக்கலாம். இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள், குறிப்பிட்ட செமஸ்டரில் படிக்க விரும்பவில்லை அல்லது அதற்குப் போதிய அவகாசம் இல்லை என்றால் அந்த செமஸ்டரில் படிப்பிலிருந்து விலகிக்கொண்டு அடுத்த செமஸ்ட்ரில் படிக்கலாம். வேலையில் இருந்துகொண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த நடைமுறை உதவியாக இருக்கும்.

இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள் கேமராவுடன் கூடிய லேப் டாப் அல்லது டெஸ்க் டாப் வைத்திருக்க வேண்டும். அதற்கு இன்டர்நெட் வசதியும் தேவை. இதன் மூலம், ஆன்லைன் மூலம் நடத்தும் பாடங்களைக் கேட்டு, தங்களது சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற முடியும். இந்தப் படிப்புக்குத் தேவையான ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர்களை மாணவர்களின் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்வதில் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையம் தேவையான உதவிகளை வழங்கும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் குறிப்பாக மாலை நேரங்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும். 60 நிமிடங்களிலிருந்து  90 நிமிடங்கள் வரை ஒரு வகுப்பு இருக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் 25 வகுப்புகளிலிருந்து 30 வகுப்புகள் வரை இருக்கும். இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு 50 சதவீத வருகைப் பதிவு இருக்க வேண்டும். தியரி வகுப்புகளுடன் செயல்முறை விளக்க வகுப்புகளும் நடத்தப்படும். இதுதவிர வகுப்பறைத் தேர்வுகள், அசைன்மெண்ட்டுகள் போன்றவற்றின் அடிப்படையில் அகமதிப்பீடும் இருக்கும். மாணவர்களுக்காக வகுப்புகள் நடத்தப்படும் நேரங்களில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களைக் கவனிக்கிறார்களா என்பதும் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு செமஸ்டர் முடிவிலும் எழுத்துத் தேர்வுகளை தேர்வு மையங்களில் எழுத வேண்டியதிருக்கும். பாடத்திட்டங்கள், இந்தப் படிப்பு குறித்த விரிவான விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆன்லைன் முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் கட்டணம் ரூ.29,500. பிற மாநில மாணவர்களுக்கு கட்டணம்  ரூ.30 ஆயிரம். இரண்டாவது செமஸ்டரிலிருந்து கட்டணம் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பங்களைப் பிரிண்ட் அவுட் எடுத்து அதில் புகைப்படத்துடன் மாணவர்களின் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100.  ‘The Director, Centre for Distance Education, Anna University, Chennai – 600 025  என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 11-08-2014க்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

விவரங்களுக்கு: http://www.annuniv.ecu/cde