1 April 2014

மத்திய ஆயுத போலீஸ் படையில் 2,197 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை!

மத்திய ஆயுத போலீஸ் படையின் கீழ் இயங்கி வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ - திபெத்திய எல்லை போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, சஷாஸ்த்ரா சீமா பால் ஆகிய பிரிவுகளில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 167 இடங்களும், பழங்குடியினருக்கு 322 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 608 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 1,100 இடங்களும் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 20 வயதுக்குக் குறையாமலும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்கவேண்டும். ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இதேபோல முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு. என்.சி.சி. யில் பி அல்லது சி பிரிவு சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு எப்படி இருக்கும்?:
எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 400 மதிப்பெண்கள். அப்ஜெக்ட்டிவ் முறையிலும், விரிவாக எழுதும் முறையிலும் எழுத்துத் தேர்வு இருக்கும். அப்ஜெக்ட்டிவ் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள். ஜெனரல் அவேர்னெஸ், ரீசனிங், குவான்டிடேட்டிவ் ஆப்டிட்யூட், இங்கிலீஷ் காம்ப்ரிஹென்சன் ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வுக்கு விடையளிக்க மொத்தம் இரண்டு மணி நேரம் வழங்கப்படும்.
விரிவாக தேர்வு எழுதும் முறையில், இங்கிலீஷ் லாங்க்வேஜ் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆங்கில மொழியில் காம்ப்ரிஹென்சன், பிரிசிஸ், லெட்டர் ரைட்டிங் மற்றும் கட்டுரை எழுதுதல் ஆகியவை இருக்கும். இத்தேர்வுக்கு விடையளிக்க இரண்டு மணி நேரம் வழங்கப்படும்.

இந்த இரண்டு தேர்வுகளிலும் தகுதி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதிலிருந்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பணிக்குத் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்தாள் ஜூன் 22-ஆம் தேதியும், இரண்டாம் தாள் செப்டம்பர் 21-ஆம் தேதியும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை,  திருச்சி ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் இத்தேர்வை எழுதலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?:
பொதுப் பிரிவினருக்கும் மற்றவர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.100. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆஃப்லைன் முறையில் ‘central recruitment fee stamps (CRFS)’ மூலம் தபால் துறை அலுவலகத்தில் செலுத்தவும். ஆன்லைனில்  செலானை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் கட்டணத்தைச் செலுத்தலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். பின்னர் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2014
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai  
விவரங்களுக்கு: http://ssconline.nic.in/